Sunday, May 16, 2010

வருங்கால விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழை சத்து எனப்படும் நைட்ரஜனும், மணி சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஸ் சத்தும் ஆகும்..உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றி அமையாதது ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிசத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது.தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30 - 40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணி சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தி ஆகும் மணி சத்தில் 90% மொராக்கோ,சீனா,தென் அமெரிக்கா,ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணி சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணி சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணி சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது.இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணி சத்தின் விளை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்கு பிறகு மணி சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது.இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

1.முடிந்த அளவு மணி சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள்(பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.

2.தேவையற்ற மணி சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணி சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும்.இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணி சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3. மண்னில் அதிக அளவு மணி சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகபடுத்த முடியாத படி உள்ளது.ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிசத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றி கொடுக்கும். இதன் மூலம் மணி சத்து உரத்தின் தேவையை குறைக்களாம்.இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம்.ஆனால் இவை மண்ணில் இருக்கும் ஆனால் பயிர்களால் எடுக்க முடியாத மணி சத்தை தான் பயிருக்கு எடுக்க உதவும்

4. மணி சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சளை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும்.

5.மனித கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனித கழிவுகளிலிருந்து மணி சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்

எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணி சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது. வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.
இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரிய வில்லை.

--

5 comments:

  1. அன்புள்ள நண்பருக்கு, உண்மையில் உங்கள் பதிவுகள் நல்ல வேளாண்மை சிந்தனையை வளர்க்கின்றது.. பணி தொடரவும்..

    ReplyDelete
  2. நன்றி suresh. நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறோம்

    ReplyDelete
  3. நண்பருக்கு வணக்கம்,
    உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர் மற்றோரெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர்.

    நல்ல தகவலகளை இணைத்தில் அளித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள் பல. விவசாயத்தில் ஏற்றுமதி சம்பந்தமான தகவல்கள் இருந்தால் கூறுங்களேன். மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன்.
    வாழ்த்துக்களுடன்
    நவநீதன்

    ReplyDelete
  4. த‌ழை,ம‌ணி,சாம‌ப‌ல் ச‌த்து ப‌ற்றியெல்லாம் எப்போதோ வானொலியில் கேட்ட‌தை விப‌ர‌மாக‌ இங்கு ப‌டிக்க‌முடிந்த‌து அதோடு அத‌ன் ப‌ற்றாக்குறை ப‌ற்றியும் தெரிந்துகொள்ள‌ முடிந்த‌து.ம‌னித‌ க‌ழிவுக‌ளில் இருந்து பெற‌முடியும் என்றால் த‌மிழ‌க‌த்தில் அம்மாதிரி திட்ட‌ம் ஏதும் ந‌ட‌ப்பில் இருக்கா? அல்ல‌து அவ‌ற்றை எப்ப‌டி டிஸ்போஸ் செய்கிறார்க‌ள் என்ற‌ மேல் த‌க‌வ‌ல் ஏதும் உண்டா?

    ReplyDelete
  5. எனக்கு தெரிந்து தமிழகம் மட்டுமல்ல. உலகில் எங்குமே இது போன்ற திட்டங்கள் இல்லை. இது ஏட்டளவிலேயே உள்ளது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்