Monday, December 27, 2010

மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை

கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக்கிழங்கு (கண்வள்ளிக்கிழங்கு - சன் டி.வி.) என்றெல்லாம் அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா (ஆங்கிலத்தில் மலபார் குளோரி லில்லி), ஒரு காலத்தில் மர்ம தேசப் பயிராகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப கால விலையேற்றத்தால் (2009 - ஒரு கிலோ ரூ.1600) தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் ஒரு மூலிகைப் பயிராகிவிட்டது.

இதில் வெகுஜன ஊடகங்களான தினசரி, வார, மாத ஏடுகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவை செய்தியை முந்தித்தரும் நோக்கத்தில், இதை வாங்கும் நிறுவனங்களுக்கே தெரியாத மருத்துவப் பயன்களையெல்லாம் பட்டியலிடுவது அனைவரையும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது.(வயிற்றுவலி, பூச்சி மருந்து, ஆண்மை பெருக்கி - ஆர்வக் கோளாறில் கிழங்கை புடுங்கி சாப்பிட்டராதீங்க வாலிப வயோதிகர்களே, அப்புறம் உங்கள ஆண்டவனாலும் காப்பத்த முடியாது, ஆமாம் கிழங்கு மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தது)

மாற்றுப்பயிர் தேடும் ஆர்வம் மிகுந்த விவசாயிகளுக்கு ஒரு சலனத்தை (சபலத்தை) இந்தப்பயிர் நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாது. இது போன்ற புதுப்பயிர்களை முயற்சி செய்யும் முன் அது பற்றிய சாகுபடித்தகவல், சந்தை நிலவரம், முதலீடு, எதிர்காலம் போன்றவற்றை நன்கு தெரிந்துகொண்டு அதன் பின் முயற்சிக்கலாம். எனவே கண்வலிக்கிழங்கு சாகுபடி பற்றி முடிந்தவரை முழுமையான தகவல்களை தந்துள்ளேன்.

தாவர பெயர் : குளோரியோசா சூப்பர்பா
குடும்பம் :லில்லியேசியே

பிற மொழி பெயர்கள்
ஆங்கிலம் :மலபார் குளோரி லில்லி
தெலுங்கு :அடவிநாபி
மலையாளம் :காந்தள்
கன்னடம் :கொலிகுட்டுமா
ஹிந்தி :கலிஹரி


சாகுபடிக்கு வந்த விதம்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சாகுபடியாகும் இடங்கள்

மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக கரூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது, ஏறக்குறைய 700௮00 டண் விதை உற்பத்தியாகிறது.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

இந்த பயிர் பொதுவாக வரண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான்.

வடிகால் வசதி இல்லாத நிலத்தில் பயிர்



வடிகால் வசதி உள்ள இடத்தில் பயிர்




சாகுபடிக்கு ஏற்ற மண்

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒடக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகியவை ஏற்றது. வடிகால் வசதியில்லாத தாழ்வான நிலங்கள், களிமண், சதுப்பு நிலம் போன்றவை ஆகாது. கடலை, குச்சிக்கிழங்கு, மஞ்சள், கோலியஸ் போன்றவை நன்கு விளையும் நிலமாக இருந்தால் போதும். அடியில் உள்ள இரண்டு இடங்களும் முந்தைய நாள் மழை பெய்த நிலம், வித்தியாசத்தை பாருங்கள்.

சாகுபடிக்கு ஏற்ற பருவம்

ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் விதைக்கிழங்கு நடவு செய்ய ஏற்ற காலம்,

விதைக்கிழங்கு சேகரம் செய்தல்

விதைக்கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தோ, காடுகளில் சேகரம் செய்தோ ஒலைக்குடிசை போன்ற வெப்பம் தாக்காத இடங்களில், தரையில் 5 - 10 செ.மீ. உயரத்திற்கு மணலைக் கொட்டி அதன் மீது சேகரம் செய்த கிழங்குகளை 15 - 20 செ.மீ. அகல வரப்புக்கள் போன்று 20 செ.மீ. உயரத்திற்கு மிகாமல் காற்றோட்டமாக வைக்கவும். பெவிஸ்டின் 5 கிராம் ஒரு கூடை மணலில் கலந்து தூவிவிடுவது நல்லது.


தவறான முறை



சரியான முறை




விதைக்கிழங்கைக் கையாளுதல்

கிழங்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக அட்டைப் பெட்டியில்தான் கொண்டு செல்லவேண்டும். அதிக பட்சமாக ஒரு பெட்டி 30௪0 கிலோவிற்கு மிகாமல் இருக்கவும். நடவிற்கு எடுத்து செல்லும் போது கூடை போன்றவற்றில் காகிதம் அல்லது வைக்கோல் வைத்து எடுத்து செல்லவும்.









தேவையான விதைக் கிழங்கு

சிறிய கிழங்காக இருந்தால் (40- 50 கிராம்) 500 கிலோ ஒரு ஏக்கருக்கும், பெரிய கிழங்காக இருந்தால் (100 - 120 கிராம்) 600 கிலோ ஒரு ஏக்கருக்கும் தேவைப்படும். கிழங்கு 40 கிராமுக்கு குறைவாக இருந்தால் முதல் வருடம் 100 கிலோவுக்கு குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும்.

உபயோகமற்ற கிழங்குகள்


பெரிய, சிறிய, நடுத்தர கிழங்குகள்



உழவு

குறைந்தது 2 - 3 உழவு அவசியம், அதில் ஒன்று 5 கலப்பை உழவு போடுவது நல்லது. மண் அமைப்பிற்கு ஏற்றவாறு உழவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். கடைசி உழவில் 2 - 3 டண் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

வரப்பு அமைத்தல்

6 அடி இடைவெளி விட்டு வரப்பு அமைக்கவும், வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கு நடவிற்கு குழி வரப்பும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பும் அமைக்கவும்.



நடவு செய்யும் பக்குவம்

முடிந்த வரை கிழங்கு முளைப்பு வந்த பின் நடவு செய்தால் 100 சதவீத முளைப்புத்திறன் இருக்கும், ஆனால் முளைப்பு வந்த கிழங்கைக் கவனாமாக கையாள வேண்டும், இல்லையென்றால் மிருதுவான முளைப்பு உடைந்து விடக்கூடும்.





நடவு செய்யும் முறை

வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கை வாய்க்காலிலும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பிலும் 5 - 10 செ.மீ. (மண் தன்மைக்கேற்ப) ஆழத்தில் கிழங்குகளை படுக்கை வசமாக 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக வைக்கவும். படத்தில் சற்று நெருக்கமாக இருக்கும், இந்த அளவிற்கு அடர்த்தி தேவையில்லை.

சொட்டு நீர் பாசனம்



வாய்க்கால் பாசனம்





நீர் பாசனம்

நடவு முடிந்ததும் உயிர் நீர் உடனடி அவசியம் இல்லை எனினும் இரண்டொரு நாட்களில் தண்ணீர் விடவேண்டும்.




முளைப்பு

சரியான பருவம் வந்தாலோ அல்லது பருவ மழை நன்கு பெய்தாலோ உடனடியாக முளைப்பு வந்துவிடும். மூங்கில் குருத்து போல் வேகமாக வளர ஆரம்பிக்கும், பருவ மழை சரியாக தொடர்ந்து பெய்தால் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.


தொடர்ந்து அடுத்த பதிவில் காண்போம்

---

Sunday, August 29, 2010

தலை கீழாய் வளரும் தக்காளி!

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம்.இதுவே தக்காளியை மேலிருந்து கீழ் நோக்கி
வளர்த்தால் எப்படி இருக்கும்?.இந்த முயற்சியை தான் Topsy Turvy என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

ஒரு செடி கீழிருந்து மேல் நோக்கி வளரும் போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவு ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழேயிருந்து மேல் நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்க்கும் போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.அது மட்டுமன்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.

நகர் புறங்களில் patio மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.

நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக
கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சளை என்னால் கணிக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு
உள்ளது.நான் வளர்த்த போது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.













அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.

இது போன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற planterகளை எளிதாக நாமே உருவாக்களாம்.இதே முறையில் நிறய செடிகளை வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்களா.இந்தியாவில் இது போல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.

முக்கியமாக கிராம புற சுய உதவி குழக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராம புரத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இது போல் யாராவது முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை.மற்ற பதிவுகளில் எழுதியது போல் blog-ல் புலம்புவதோது விட்டு விடாமல், இம்முறை Topsy Turvy Planterகளை அரசு சாரா சேவை நிறுவனம்,விவசாய கல்லூரி, விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டகலையில் விருப்பம் உள்ளவர்களுக்கென இந்தியாவில் பல பேருக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். அதில் ஒரு சிலராவது நல்ல முயற்சி செய்து பார்க்கிறார்களா? என்று பார்ப்போம்.

--

Friday, August 6, 2010

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம்- 1)

இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!

விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள், மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority) நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது.

PPV & FRA, 2001 சட்டத்தின் நோக்கம்
* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது

*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது

* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது

* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.

(தொடரும்)

--

Monday, July 26, 2010

பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம் 1)

விவசாயமே நம் நட்டின் பலம் என்ற் கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தாகும். நம் நாட்டின் மொத்த ஆண்டு வருவாயில் (GDP) 31 சதம் விவசாயம் மூலம் கிடைக்கிற்து என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், 64 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, விவசாயம் சார்ந்த எந்த ஒரு முடிவுக்கும் பெரும் விளைவுகள் ஏற்படுவது இயல்பே!.

இதை மனதில் கொண்டே நீண்ட பரிசீலனைக்குப் பின் இந்திய அரசு "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்,2001" என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு யூபாவின் பேடன்ட் முறையை அப்படியே பின்பற்றாமல், விவசாயிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதிய சுதந்திரமும், உரிமையும் அளிக்கக்கூடிய தனித்தன்மை உடையதாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம். 2001ல் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதி முறைகள் செப்டம்பர் 12, 2003ல் கெசட்டில் வெளியிடப்பட்டது.

இச்சட்டம் பற்றி அறியும் முன், 'காட்' (GATT), 'டிரிப்ஸ்' (TRIPS) மற்றும் உலக வர்தக சபை (WTO) பற்றிய ஒரு பிளாஷ் பேக்!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் போரினால் ஏற்பபட்ட பாதிப்பை சீரமைக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் நேச நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்று ஸ்தாபனங்களை நிறுவின. முதலாவது 'காட்' , பன்னாட்டு உறவுகளை நெறிபடுத்துவதற்கானது; அடுத்தது 'ஐ.எம்.எப்'’ (ஈMF) - முறையான பணப்பரிமாற்றம் தொடர்பானது , மூன்றாவது 'உலக வங்கி' (World Bank / IBRD) போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கானது.

இதில் 'காட்' ஒப்பந்தத்தின் உருகுவே மாநாட்டின் விளைவாக உருவானது தான் உலக வர்தக சபை. 'காட்'டில் உள்ள நாடுகள் ஜனவரி 1, 1995ல் உ.வ.சபை உருவாகக் கையெழுத்திட்டன. இந்தியாவும் உலக வர்தக சபையின் நிறுவன நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே மாநாட்டில் மூன்று புத்தம் புதிய ஒப்பந்தங்கள் உருவாயின. அதிலொன்றுதான் 'டிரிப்ஸ்'. மற்றவை, 'டிரிம்ஸ்' (TRIMS) ம், 'Trade in Services' ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தம் ஐ.பி.ஆர் எனும் ‘Intellectual Property Rights’ மனித குலம் முன்னேற மிக அவசியம் என்கிறது. கண்டுபிடிப்பாளருக்கு பயனிருந்தால் தானே, புதியன கண்டுபிடிக்க ஊக்கம் பிறக்கும் என்பது இதன் லாஜிக்*.


டிரிப்ஸ்'ல் ஏழு வகையான 'ஐ.பி.ஆர்'கள் பாதுகாக்கப்படும். அவை, காப்பிரைட்ஸ், டிரேட் மார்க், பேடன்ட், ஜியாகரபிகல் இன்டிகேஸன் (உதாரணம்: காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் டீ), இன்டஸ்ட்ரியல் டிசைன், இன்டக்ரேடட் சர்க்யூட் மற்றும் டிரேட் சீக்ரெட்ஸ் ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தப்படி செடிகளையும் விலங்குகளையும் பேடன்ட் செய்ய முடியாது. ஆனால், பயிர் இரகங்களை பாதுகாக்கலாம். எ.கா. நெல்லை பேடன்ட் செய்ய முடியாது ஆனால் அதன் இரகங்களை (பொன்னி, பொன்மணி, ADT 43) பாதுகாக்கலாம்.

(ப்ளாஸ் பேக் முடிந்தது. அப்பாடா!)
(தொடரும்)

--

Sunday, July 25, 2010

கில்ராய் பூண்டுத்திருவிழா!


நம்மூரில் கடவுளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுப்பது சர்வ சாதாரணம்.ஆனால் பூண்டுக்காக ஒரு திருவிழா என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அது உண்மைதான். பூண்டுக்கு விழா எடுக்கப்படும் இடம் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய். கில்ராய் பகுதி பூண்டுகளுக்கு பிரசித்தம் பெற்றது.1979ம் ஆண்டு முதல் இந்த திருவிழா தொடங்கபட்டது.ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த திருவிழா நடக்கும்.32 வது பூண்டு திருவிழா இந்த ஜூலை மாதம் 23,24,25 ம் நாள் நடைபெற்றது.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு சம்பத்தமான வித விதமான உணவு வகைகள் சுட சுட தயாரிக்க பட்டு பல ஸ்டால்களில் விற்பார்கள். பூண்டு சிக்கன் பிரை,பூண்டு காளாண்,பூண்டு கலந்த சாஸ் கொண்ட பாஸ்டா, பூண்டு ஐஸ் கிரிம்,பூண்டு கலந்த பிற மாமிச வகைகள் என அனைத்து உணவிலும் பூண்டு மயம் தான்!.



உணவு தயாரிக்கும் முறைகளை அனைவரும் வேடிக்கை பார்க்கும் படி வைத்திருந்தனர். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி, பூண்டு கலந்து, அதில் தீயை பற்ற வைத்து, எரியும் பாத்திரத்தில் உணவை சமைப்பதை பார்க்க பெரும் கூட்டம் கூடி இருந்தது.



அங்கு பூண்டு சம்பந்தமான அனைத்து வகை உணவு பொருட்களும் ஸ்டால்களில் குவித்து வைக்க பட்டிருந்தது. இருக்கை கூட பூண்டு வைக்கோலை வைத்து தயாரித்து இருந்தனர்.



மேலும் மக்கள் கண்டு களிக்க இசை நிகழ்ச்சிகள்,சிறுவர்கள் விளையாட பல வகை ரைடுகள் என அந்த இடமே கோலாகல பட்டது.



ஆனால் வெயிலின் கொடுமை தான் மிக அதிகமாக இருந்தது. தன்னார்வ தொண்டர்கள் கடுமையான வெயிலிலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, வருபவர்களுக்கு பல உதவி செய்வது, என அயராது பணிகளை செய்தனர்.அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி, அந்த விழாவில் தயாரிக்கபடும் உணவுகள் பெரும்பான்மையாவைக்கு தேவையான உணவு பொருட்கள அனைத்தும் அந்த பகுதியில் பயிரிட படும் உணவு பொருட்களிலிருந்தே தயாரிக்க பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே கில்ராய் பகுதியை சுற்றி இருக்கும் சேவை நிறுவனக்களுக்கு பணம் திரட்டுவதே ஆகும். இதுவரை 85 லட்சத்து 25 ஆயிரத்து 322 டாலர் நிதி திரட்ட பட்டுள்ளது.



தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பல காய் கறி, பழங்கள் பிரசித்தி பெற்றது. உதாரணமாக தர்மபுரி மாம்பழம், பண்ருட்டி பலா சேலம் கப்பை கிழங்கு, ஈரோடு மஞ்சள் என அடுக்கி கொண்டே செல்லலாம். நம்மூரிலும் இது போன்ற திருவிழா நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள சேவை நிறுவனங்களுக்கு உதவி,கிராம பள்ளிகளுக்கு நிதி என நல்ல காரியங்களுக்கு செலவிடலாம். அது மட்டுமன்றி நகரில் இருக்கும் மக்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்.

--

Saturday, June 26, 2010

வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?




முதல் பகுதி

இரண்டாம் பகுதி

இது மன்ணில் வாழும் ஒரு நுண்ணுயிர். இயற்கை தந்த வரம். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.தானாக வந்தது. செயற்கையாக யாரும் உருவாக்கியது இல்லை.இயற்கையினால் உருவாக்க பட்ட உயிர்.இந்த உயிருக்கு B.T என்று விஞ்ஞானிகளால் பெயர் சூட்டபட்டுள்ளது. அதாவது bacillus thuringiensis என்ற பெயரின் சுருக்கம் தான் B.T.

மண்ணில் வேளாண்மைக்கு நன்மை செய்யும் உயிரிகள் ஏராளமாக உள்ளன. மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் பெரும்பான்மையானவை பயிருக்கு நன்மை தான் செய்கின்றன.BT என்ற நுண்ணியிர் பேக்டீரியா வகையை சார்ந்தது. முதன் முதலில் இந்த நுண்ணியிர் ஜப்பான் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன் கன்டுபிடிக்க பட்டது. 1911ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள துரிஞ்சிஸ் என்ற இடத்தில் மீண்டும் கண்டு பிடிக்க பட்டது. அதனால் தான் பேசில்லஸ் துரிஞ்சன்ஸிஸ் என்ற பெயர் வந்தது.


இந்த நுண்ணியிரியில் என்ன உள்ளது?


இந்த பாக்டீரியாவில் பூச்சு மருந்துகளின் குணாதிசயம் கொண்ட 138 வகை மரபணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது பூச்சிகளை கொல்ல மருந்துகளை தெளிக்கின்றோம். ஆனால் இந்த நுண்ணியிரியிடம் இயற்கையிலேயே பூச்சிகளை கொல்லும் மருந்து தன் உடலினுள் உள்ளது.

இந்த நுண்ணியிரியில் உள்ள பூச்சி கொள்ளி மருந்தை தயாரிக்கும் ஜீன்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.அவற்றில் முக்கியமாக cry1ac என்ற மரபணு பருத்தி காய் புழுக்களை கட்டு படுத்தம் விஷத்தை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அந்த மரபணுக்களை ஆய்வகத்தில் தனியே பிரித்தெடுத்து உள்ளனர்.

பிறகு அந்த மரபணுக்களை பருத்தி செடிக்குள்ளே விட்டால் பருத்தி இயற்கையிலேயே காய்புழுக்களை கட்டு படுத்தும் தன்மை பெரும். விஞ்ஞானிகள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டர்கள். இதனால் என்ன நிகழ்கிறது என்றால், cry1ac என்ற மரபணு விஷ புரதத்தை பருத்தி செடியின் இலை,காய், பூ,சப்பை போன்ற பகுதியில் உர்பத்தி செய்கிறது.அதாவது இலை முளைத்த நாள் முதல், இளமை பருவம், சப்பை வைக்கும் பருவம், பூக்கும் பருவம்,காய் பருவம், அறுவடை பருவம் என முளையிலிருந்து அறுவடை வரை பயிரை காக்க உதவும்.

இது தான் தொழில் நுட்பத்தின் சாராம்சம். இனி இது தமிழ் நாட்டு விவசாயத்தில் BT நடத்தி வரும் புரட்சிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

--

Sunday, May 16, 2010

வருங்கால விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழை சத்து எனப்படும் நைட்ரஜனும், மணி சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஸ் சத்தும் ஆகும்..உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றி அமையாதது ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிசத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது.தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30 - 40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணி சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தி ஆகும் மணி சத்தில் 90% மொராக்கோ,சீனா,தென் அமெரிக்கா,ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணி சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணி சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணி சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது.இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணி சத்தின் விளை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்கு பிறகு மணி சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது.இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

1.முடிந்த அளவு மணி சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள்(பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.

2.தேவையற்ற மணி சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணி சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும்.இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணி சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3. மண்னில் அதிக அளவு மணி சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகபடுத்த முடியாத படி உள்ளது.ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிசத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றி கொடுக்கும். இதன் மூலம் மணி சத்து உரத்தின் தேவையை குறைக்களாம்.இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம்.ஆனால் இவை மண்ணில் இருக்கும் ஆனால் பயிர்களால் எடுக்க முடியாத மணி சத்தை தான் பயிருக்கு எடுக்க உதவும்

4. மணி சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சளை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும்.

5.மனித கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனித கழிவுகளிலிருந்து மணி சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்

எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணி சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது. வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.
இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரிய வில்லை.

--